சாத்தான்குளம் சம்பவம் வருந்தத்தக்கது!

சாத்தான்குளம் சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. போலீஸ்காரர்கள் தாக்குதலில் தான் இருவரும் இறந்தார்கள் என்று கருதுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது! உண்மையாக அப்படி நடந்திருந்தால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். போலீஸ்காரர்கள்  சட்டவிரோதமாக மனிதநேயமே இல்லாமல் இப்படி நடந்து கொள்வது மிகுந்த வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது.

ஆனால் மரணம் போலீஸ் லாக்கப்பில் இருந்தபோது நடக்கவில்லை! சிறைக்குச் சென்ற பிறகு நடந்துள்ளது! ஆதலால் இறப்பிற்கான காரணம் என்ன என்பதை மருத்துவர்கள்  தெரிவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம் தன்னிச்சையாக குற்றவியல் மனுவாக வரிசைக்கு எடுத்துக்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டு மருத்துவ அறிக்கை கோரியுள்ளது. இதனிடையே காவல் துறை அலுவலர்கள் மற்றும் காவலர்கள் பணியிடை நீக்கம் மற்றும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். வழக்கு வெள்ளிக்கிழமைக்கு போடப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கையை பரிசீலித்து உயர் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடலாம். காவல் நிலைய மரணம், சிறைச்சாலை மரணம் குறித்து வழக்கு பதிவு செய்வது காவல் நிலைய வரம்புக்குள் வராது. உயர் நீதிமன்றம் அல்லது அரசு  விசாரணை அலுவலர்களை நியமிக்க வேண்டும்! அனேகமாக சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு போகும். அவர்கள் புலனாய்வு மேற்கொண்டு தாக்கல் செய்யும் குற்ற அறிக்கையின் மீது நீதிமன்றத்தில் சாட்சிய  விசாரணை நடந்து தான் தீர்ப்பளிக்கப்படும். அத்  தீர்ப்பில் தண்டனை வழங்கப்படுகின்ற போதுதான் பணிநீக்கம் போன்ற நடவடிக்கைகளை எடுக்க இயலும்! இதுதான் நடைமுறை! மனித உரிமை ஆணையமும் அரசுக்கு அறிவிப்பு அனுப்பி உள்ளது. மனித உரிமை ஆணையமும் இவ்வழக்கு குறித்து விசாரணை செய்ய உள்ளது. மனித உரிமை மீறல்கள் நடந்ததாக மேற்படி ஆணையம் தீர்மானித்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வாய்ப்புள்ளது.

சில வெளிநாடுகளில் நடைபெறுவது போல் துரிதகதியில் தண்டனை வழங்கும் நடைமுறை நமது நாட்டில் இல்லை. அப்படிப்பட்ட நடைமுறை இருந்தால் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை கிடைக்கும் என்பதால் அதுபோன்ற நடைமுறை வேண்டுமென்று எண்ணுவது இயல்புதான். ஆனால் நிரபராதிகள் மீது பொய்யான வழக்குகளை ஜோடித்து துரிதகதியில் தண்டனை வழங்கினால் பல அப்பாவிகளின் வாழ்க்கை நரகமாகிவிடும் என்பதால் அப்படிப்பட்ட கடுமையான நடைமுறைகள் நமது நாட்டில் இல்லை. குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க வேண்டுமென்று ஆவேசப்படும் மக்களில் எவ்வளவு பேர் நீதிமன்றத்திற்குச் சென்று உண்மையான சாட்சியமளிக்க தயாராக உள்ளார்கள் என்று எண்ணிப் பார்த்தோம் என்றால் நீதிமன்றங்களில் பெரும்பான்மையான வழக்குகள் விடுதலை ஆவதற்கான காரணம் விளங்கிவிடும்!

சாத்தான்குளத்தில் நடந்துள்ளது போன்ற மோசமான சம்பவங்கள் நடக்கின்ற போது மக்களுக்கு ஆவேசம் ஏற்படுவது இயல்பானதே. ஆனால் அதே சமயம்  உடனடியாக ஏன் தண்டனை கொடுக்கவில்லை உடனடியாக ஏன் வேலையை விட்டு நீக்கவில்லை என்பது போன்ற  நடைமுறைக்கு சாத்தியமில்லாதவற்றை கூறி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்துவது ஏற்புடையதல்ல. ஆவேசப் பேச்சுகளில் உணர்ச்சிவசப்படாமல் சரியான நடைமுறைகளை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்வது தான் முறையானது ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பு வழி இன்ப ஒளி 15

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்

அன்பு வழி இன்ப ஒளி -1